பெண்களின் உடல் மற்றும் உணர்வு நலத்தைப் பாதிக்கும் நோய்களையும் சூழலையும் கண்டறிந்து அதற்கான மருத்துவத்தில் கவனம் செலுத்தும் மருத்துவத்தின் ஒரு கிளையையே பெண்களின் ஆரோக்கியம் என்பது குறிக்கிறது.
மனிதகுல நலத்திற்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் நலம்பயக்கும் ஒரு காரணியே ஆரோக்கியம்.
தற்போது இந்தியப் பெண்கள் எண்ணற்ற சுகாதாரப் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இது ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சியையும் பாதிக்கிறது. சுகாதாரத்தைப் பேணுவதில் குறுக்கிடும் பால், வர்க்க, இன வேறுபாடுகளைக் களைவதின் மூலம் கிடைக்கும் தரமான மனித மூலதனம், அதிக சேமிப்பு, முதலீடு ஆகியவற்றால் பொருளாதார நன்மைகளை அடையமுடியும்.
விளையாட்டை அடிப்படையாகக் கொண்ட கல்வி
பாதி வான இயக்கம் இது, ஒரு விளையாட்டை அடிப்படையாகக் கொண்ட தீரச்செயல் ஆகும். இதன் நோக்கம் உலக முழுவதும் உள்ள முக்கிய பார்வையாளர்களை அணுகி, விழிப்புணர்வை உருவாக்கி, பெண்களையும் பெண் குழந்தைகளையும் வலிமைப்படுத்த நன்கொடைகளைப் பெறுவதே ஆகும்.
பெண்கள் ஆரோக்கியத்தைப் பற்றிய IEC செய்திகள்
குடும்பக்கட்டுப்பாட்டு முறைகள் :
தொடர்ந்து தவிர்த்தல்
எவ்வகையிலும் (பெண்ணுறுப்பு, ஆசனவாய் அல்லது வாய்) எந்த நேரத்திலும் உடலுறவு வைக்காமை. கர்ப்பத்தையும், எச்.ஐ.வி.ஐ உள்ளடக்கிய, உடலுறவால் பரவும் நோய்களையும் தடுக்கும் உறுதியான முறை.
தடை முறை :
பெண்ணுறை
இது பெண் தன் பிறப்பு உறுப்பினுள் வைக்கும் உறை. விந்து உடலுக்குள் புகாமல் இது தடுக்கிறது. மனிதனால் உருவாக்கப்பட்ட இது, மெல்லிய, வளைதன்மையுள்ள, ரப்பரால் ஆனது. இது மசகு எண்ணெயுடன் பொதியப்பட்டுள்ளது. இதனை உடலுறவு கொள்ளுமுன் 8 மணி நேரம் வரை உள்ளே நுழைத்து வைக்க முடியும். ஒவ்வொரு தடவை உடலுறவு கொள்ளும்போதும் புதிய உறையைப் பயன்படுத்த வேண்டும். ஆணுறையையும் பெண்ணுறையையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தக் கூடாது.
ஆணுறை
ஆணுறை என்பது, எழும்பிய ஆண்குறியைச் சுற்றி இடும் ஒரு மெல்லிய உறையாகும். விந்து பெண்ணின் உடலுக்குள் செல்லாமல் இது தடுக்கிறது. ஆணுரை மரப்பால், பாலியுரேத்தேன் அல்லது இயற்கை/ஆட்டுத் தோலால் செய்யப்படலாம், இயற்கை வகை, உடலுறவால் பரவும் நோய்களைத் தடுக்கா. ஆணுறைகளை விந்துக்கொல்லிகளோடு பயன்படுத்தும்போது அவை சிறப்பாகச் செயல்படும். ஒவ்வொரு தடவை உடலுறவு கொள்ளும்போதும் புதிய உறைகளைப் பயன்படுத்த வேண்டும்.
உறைகளில் இருவகை
• உராய்வு எண்ணெயோடு கூடியவை: உடலுறவுக்குச் சுகமானவை
• உராய்வு எண்ணெய் அற்றவை, வாய்மூலம் உறவுக்கும் பயன்படுகிறது. உராய்வு எண்ணெய் அற்றவைக்கு எண்ணெய் இட்டு பெண்ணுறுப்பு அல்லது ஆசனவாய் உடலுறவுக்குப் பயன்படுத்தலாம். இது மருந்து கடைகளில் கிடைக்கும். எண்ணெயை அடிப்படையாகக் கொண்ட மசாஜ் எண்ணெய், குழந்தைகளுக்கான எண்ணெய், பெட்ரோலியம் ஜெல்லி ஆகியவை உறையை பலவீனப்படுத்துவதால் அது கிழிய அல்லது உடைய வாய்ப்புள்ளது.
1994-95 -ல் இருந்து குடும்ப நலத்துறை, உறைகளை மொத்தமாக வாங்குகிறது. இலவச விநியோகத் திட்டத்தின் கீழ், நிரோத் என்ற குறியீட்டுப் பெயரில், இலவசமாகக் கிராமப் புறங்களில் ஆரம்ப சுகாதார மையங்கள், துணை மையங்களிலும், மருத்துவமனைகள், மருந்தகங்கள், தாய்சேய் நல மையங்களிலும் கிடைக்கின்றன.
இயக்குநீர் முறைகள்
வாய்வழி கருத்தடை மருந்துகள்-இணைந்த மாத்திரை (”மாத்திரை”)
மாத்திரையில் இயக்குநீர்களான எஸ்ட்ரோஜனும் புரொஜெஸ்டினும் அடங்கியுள்ளன. கருப்பை கருமுட்டைகளை வெளியிடாதவாறு தடைசெய்ய இது தினந்தோறும் எடுக்கப்படுகிறது. மேலும் இந்த மாத்திரை கருப்பை மற்றும் கருப்பைவாய்ச் சவ்வுகளின் புறணியில் மாற்றங்களை ஏற்படுத்தி கருமுட்டையை விந்தணு சேராமல் தடுக்கிறது.
சில பெண்கள் மாத விடாய் சுழற்சியை நீட்டிக்கும் மாத்திரைகளை உட்கொள்ளுகிறார்கள். இதில் இயக்குநீர்கள் அடங்கிய 12 வாரத்துக்கான மாத்திரைகளும் (செயலாற்றுவன), 1 வாரத்துக்கு இயக்குநீர்கள் அற்ற மாத்திரைகளும் (செயல்படாதவை) அடங்கும். இதனால் ஆண்டுக்கு மூன்று அல்லது நான்கு முறையே மாதவிடாய் உண்டாகும். I-மாத்திரை போன்ற கருத்தடை மாத்திரைகள் கடைகளில் கிடைக்கின்றன.
மேலும், மாலா D என்ற பெயரில் இந்திய அரசால் கருத்தடை மாத்திரை வழங்கும் முறை 1987-ல் தொடங்கப்பட்டது.
கருக்கலைப்பு
மருந்து மற்றும் அறுவை மூலம் என கருக்கலைப்பு இருவகைப்படும்.
மருந்துமூலம் கருக்கலைப்புஇவ்வகைக் கருக்கலைப்பில் மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இது கருக்கலைப்பு மாத்திரை என அழைக்கப்படுகிறது. இது பாதுகாப்பனதும் செயல்திறன் உடையதும் ஆகும். மருத்துவ அதிகாரியின் அனுமதியுடனேயே இதை உட்கொள்ள வேண்டும்.
அறுவைமூலம் கருக்கலைப்பு15 வார கரு வளர்ச்சி வரை இம்முறை கையாளப்படலாம். கருக்கலைத்தலில் பெரும்பாலும் வெற்றிட உறிஞ்சல் முறை கையாளப்படுகிறது.
கருத்தடை
கருத்தடை செய்வதற்கு கணவன் மனைவி ஆகிய இருவரிடமும் எழுதப்பட்ட ஒப்புதல் வாங்க வேண்டும் என்று அரசாங்கம் வழிகாட்டுதல்களைப் பிறப்பித்துள்ளது. வயது, வாழும் குழந்தைகளின் எண்ணிக்கை, திருமண நிலை போன்ற பல அடிப்படைகளைக் கொண்டு மனுதாரரின் தகுதியைக் கண்டிப்புடன் மதிப்பீடு செய்ய வேண்டும் என்று மாநில அரசுகளும் சட்டங்களையும் கொள்கை வழிகாட்டுதல்களையும் பிறப்பித்துள்ளன. 35 வயது எட்டாத பெண்ணுக்கும் ஆணுக்கும் குடும்பக்கட்டுப்பாடு செய்யக்கூடாது; திருமணமாகி இருக்க வேண்டும்; அறுவை மறுத்துவத்துக்கு இருவரின் ஒப்புதலையும் பெறவேண்டும்.
பெண்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சினைகள் எவை?
ஊட்டச்சத்தின்மை, தாய்நலக் குறைவு, எய்ட்ஸ், மார்பகப் புற்று போன்ற நோய்கள், வீட்டு வன்முறை போன்ற பல பிரச்சினைகளை இந்தியப் பெண்கள் சந்திக்கின்றனர்.
ஊட்டச்சத்தின்மை
சத்துணவு ஒருவருடைய மொத்த ஆரோக்கியத்திலும் பெரும்பங்கு வகிக்கிறது. ஊட்டச்சத்தின்மையால் மனநலமும் உடல்நலமும் பெரும்பாதிப்பை அடைகின்றன.
இந்தியா, வளர்ந்து வரும் நாடுகளில், அதிக அளவு சத்துணவற்ற பெண்களைக் கொண்டுள்ள நாடுகளில் ஒன்றாகும். ஒரு 2012 தரோசி ஆய்வின் படி, ஆரம்ப வளரிளம் வயதினரில் இருபாலரும், ஏறத்தாழ ஒரே அளவிலேயே சத்துணவு உட்கொள்ளுகின்றனர். ஆனால் வளர்ந்த பின் பெண்களுக்கு ஊட்டச்சத்து குறைகிறது.
தாய்க்கு ஊட்டச்சத்தின்மையோடு தாய் இறப்பு விகிதமும், குழந்தைகளின் பிறப்புக் குறைபாடுகளும் இணைந்துள்ளன. ஊட்டச்சத்தின்மைப் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதன் மூலம் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பலன் ஏற்படும்.
தாய்நலக் குறைபாடு
தாய்நலக் குறைபாடே தாய்க்கும் குழந்தைக்கும் பொருளாதார தாழ்வுநிலையை ஏற்படுத்துகிறது.
தாயின் நலக்குறைவு குழந்தையின் நலத்தையும், பொருளாதார செயல்பாட்டில் தாய் பங்கு கொள்ளும் திறனையும் பாதிக்கிறது. இதனால் இந்தியா முழுவதும் தாய் நலத்தைப் பேண தேசிய ஊரக சுகாதார இயக்கம், குடும்ப நலத் திட்டம் போன்ற தேசிய சுகாதாரத் திட்டங்கள் உருவாக்கப்பட்டன. கடந்த இருபதாண்டுகளில் இந்தியா வியத்தகு வளர்ச்சியை அடைந்திருந்தாலும், பல வளர்ந்து வரும் நாடுகளோடு ஒப்பிடும் போது மகப்பேறு மரண விகிதம் அதிக அளவிலேயே தொடர்ந்து இருந்து வருகிறது.
1992-2006 காலகட்டத்தில் உலக நாடுகளில் ஒட்டுமொத்தமாக ஏற்பட்ட மகப்பேற்று மரணங்களில் இந்தியாவின் அளவு 20 சதவிகிதம் ஆகும். பொருளாதார ஏற்ற தாழ்வுகளும், தாய்நலம் பேணலை அடைவதில் குறுக்கிடும் கலாச்சார தடைகளுமே இதற்கு முக்கிய காரணங்களாகும்.
எனினும், மகப்பேற்று மரணம் இந்தியா முழுவதிலுமோ அல்லது ஒரு குறிப்பிட்ட மாநிலத்திலோ ஒரே மாதிரியாக இல்லை. போதுமான அளவுக்கு மருத்துவ வசதிகள் கிடைப்பதால் நகர்ப்புறங்களில் மகப்பேறு மரணவிகிதம் குறைவாக உள்ளது. கல்வி மற்றும் வளர்ச்சி விகிதம் கூடுதலாக உள்ள மாநிலங்களில் தாய்நலம் சிறப்பாகவும் குழந்தை இறப்பு விகிதம் குறைவாகவும் உள்ளது.
தற்கொலை
தற்கொலை இந்தியாவின் ஒரு முக்கியப் பிரச்சினையாகும். இந்தியாவின் தற்கொலை விகிதம் வளர்ச்சி பெற்ற நாடுகளை விட ஐந்து மடங்கு அதிகமாகும். ஆண்களை விட அதிக அளவில் பெண்களே தற்கொலை செய்து கொள்கின்றனர்.
தற்கொலைக்கான முக்கிய காரணங்கள் பின்வருவனவற்றுடன் நேரடித் தொடர்புடையது:
மனவழுத்தம்
மனக்கலக்கம்
பாலியல் பாரபட்சம்
வீட்டு வன்முறை
பாலியல் மற்றும் தொழில் ரீதியாக பெரும் பாரபட்சங்களை எதிர்கொள்ளும் இந்தியப் பாலியல் தொழிலாளர்கள் மத்தியில் தற்கொலை விகிதம் அதிகமாகும்.
வீட்டு வன்முறை
வீட்டு வன்முறை இந்தியாவில் ஒரு பெரும் பிரச்சினையாகும். பெண்களுக்கு எதிரான உடல், உள, பாலியல் வன்முறையே வீட்டு வன்முறை என வரையறுக்கப்படுகிறது. இது உலகம் முழுவதும் காணப்படுகிறது. உலக சுகாதார அமைப்பு இதனை ஒரு மறைமுகத் தொற்றுநோய் எனப் பார்க்கிறது.
இந்திய தேசிய குடும்ப சுகாதார மதிப்பாய்வு III (2005-2006)-ன் படி கடந்த 12 மாதங்களில் 31% பெண்கள் உடல் ரீதியாக கொடுமைக்கு ஆளானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும். மத்திய வருவாய்ப் பெண்களை விட ஏழைப் பெண்களே மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு கூறுகிறது.
பணிச்சூழலில் இந்தியப் பெண்கள் எவ்வாறு நடத்தப் படுகின்றனர் ?
வேலைசெய்தலும், பணியமர்த்தமும் வெவ்வேறு பாலினத்துக்கு வெவ்வேறு விதமாக உள்ளது. வேலை செய்யும் பல பெண்களுக்குத் தொற்று, வன்முறை, தசையெலும்பு காயங்கள், உழைக்கும் சக்தி இழத்தல் போன்ற அபாயங்கள் உள்ளன. பொதுவாக ஆண்களைவிட பெண்களே, அதிலும் குறிப்பாகப் பரம்பரைத் தொழில் அல்லாத பிற தொழில்களில், பாரபட்சத்தையும் கொடுமையையும் அனுபவிக்கின்றனர்.
http://www.who.int/gender/other_health/Gender,HealthandWorklast.pdf (link is external)
இந்தியாவுக்கான பாலியல் ரீதியான அதிகாரம் அளித்தல் :http://wcd.nic.in/publication/gdigemSummary%20Report/GDIGEMSummary.pdf
20 மற்றும் 30 வயது பெண்களுக்கு மருத்துவ சோதனை
-
எடை பார்த்தல்: எடை கூடுதலினால் பிற்கால வாழ்க்கையில் பலவிதமான நோய்கள் உண்டாகும் ஆபத்து இருப்பதால் அடிக்கடி எடை பார்ப்பது அவசியம்.
-
இரத்த அழுத்தம்: எளிதாகவும், விரைவாகவும் அதிக செலவின்றியும் அளக்கலாம்.
-
கொழுப்பின் அளவு: கொழுப்பின் அளவையும் சோதித்துப் பார்க்க வேண்டும். 20 வயதுக்கு மேற்பட்ட எவரும் தங்கள் கொழுப்புச்சத்து எண்ணைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை சோதனை செய்யவும் வேண்டும்.
-
பெண்களுக்கு மட்டும்: மார்பக, இடுப்பு மற்றும் மார்புக் காம்பு சோதனை. மார்பக மற்றும் 10 நிமிடம் அசௌகரியத்தை அளிக்கும் இடுப்பு சோதனைகளால் பெரும் நன்மைகள் விளையும். புற்று நோயில் இருந்தும் மலட்டுத் தன்மையை விளைவிக்கும் நோய்களில் இருந்தும் காக்கும். முன்னர் அசாதாரணமான மார்புக் காம்புகள் இருந்திருந்தால் மருத்துவர் ஆலோசனையுடன் மார்புக்காம்பு சோதனை செய்யவும். அசாதாரணமான மார்புக்காம்பு இல்லையென்றால் ஓராண்டுக்குப் பதிலாக மூன்றாண்டுக்கு ஒருமுறை இப்பரிசோதனை செய்யலாம்.
-
கண்களைப் பாதுகாத்தல்: இதைப்பற்றி சிந்திக்காமல் இருந்திருந்தாலும், நாற்பது வயதுக்குப் பின், கண் சோதனை செய்து கொள்ள வேண்டும்.
-
நோய்த்தடுப்பைப் பரிசோதித்தல்: எடுக்காமல் விட்ட தடுப்பு மருந்தை உடனடியாக உட்கொள்ளவும்.
40 வயது பெண்களுக்கு மருத்துவ சோதனை
-
இரத்த சர்க்கரை: பல்லாண்டுகளாகத் தவறான உணவை உட்கொள்வதாலும் (காபி, தின்பண்டங்கள், வறுவல்கள் போன்றவை) எடை கூடுதலாலும் (பெரும்பாலும் இயக்குநீர் மாற்றங்களால்) கணையம் அதிகப்படியான வேலையைச் செய்திருக்கக்கூடும். 45-வது வயதில் இரத்த சர்க்கரை அளவைச் சோதிக்க வேண்டும்; பின் குறைந்தபட்சம் மூன்றாண்டுக்கு ஒரு முறை தொடர்ந்து சோதிக்க வேண்டும்.
-
மார்புப் பரிசோதனையும் மார்பூடுகதிர் சோதனையும்: வீட்டில் மார்பகப் பரிசோதனை தொடர்ந்து செய்து வந்தாலும் மருத்துவர் ஆண்டுக்கு ஒருமுறை சோதனை செய்ய வேண்டும். 40 வயதுக்கு மேல் முலையூடுகதிர் சோதனை செய்ய வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
-
இரத்த அழுத்தம்: பொதுவாக வயதுக்கு ஏற்ப இரத்த அழுத்தமும் அதிகரிக்கக் கூடும். நல்ல வேளையாக ஒருவர் உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி, தியானம் மூலம் இரத்த அழுத்தத்தைக் குறைக்க முடியும்.
-
எடை அளத்தல்: எடையைக் கட்டுக்குள் வைத்துக் கொள்வது மிக முக்கியமானது. ஏனெனில் அதிக எடையால் நீரிழிவு, இதய நோய்கள் போன்ற பல நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.
-
இடுப்பு மற்றும் முலைக்காம்பு சோதனை: உடலுறவில் செயல்திறனுடன் இருக்கும் ஒரு பெண் குறிப்பாக இச்சோதனை செய்து கொள்ள வேண்டும்.
-
மச்சங்கள் இருப்பதைச் சோதித்தல்: அசாதாரணமான மச்சங்கள் அல்லது தோல் மாற்றங்கள் புற்று நோய் அறிகுறிகளாக இருக்கலாம். ஆனால் ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் குணப்படுத்தி விடலாம்.
-
கண்களைப் பாதுகாத்தல்: கணினியில் படித்தலும் வேலைபார்க்கவும் பிரச்சினையாக உள்ளதா? இது வழக்கத்துக்கு மாறானதல்ல. 40 வயதுக்கு மேல் ஈராண்டுக்கு ஒருமுறை 60 வயது வரை வெள்ளெழுத்து, கண்ணழுத்த நோய் போன்ற பொதுவான பிரச்சினைகளுக்காக கண்களை சோதித்து வரவேண்டும்.
-
முறையாகத் தடுப்பு மருந்துகள் எடுத்தல்: மருத்துவரிடம், நரம்பிசிவு நோய்க்கான தடுப்பு மருந்தின் ஊக்க அளவு, நச்சுக்காய்ச்சல், நிமோனியா ஆகியவற்றுக்கான தடுப்பு மருந்துகள் ஆகியவற்றை எப்போது எடுக்க வேண்டும் என்பதைக் கேட்டறிய வேண்டும்.
வெளித்தொடர்புகள்/ குறிப்புகள்